Saturday, January 27, 2007

158. பொங்கல் முடிந்தாலும் ஆசை குறையவில்லை..

ஒரு வாரத்துக்கு ஊரும் சுத்தியாச்சு.. பொங்கலும் சாப்பிட்டாச்சு.. பொங்கல் படங்களையும் பார்த்தாச்சு..

படத்தை தனி தனியாக மேயப் போவதில்லை. நம் நண்பர்கள் ஒவ்வொன்றையும் நன்றாக அலசி காயப்போட்டுட்டாங்க.. எல்லா படங்களுக்கும் சேர்த்து ஒரே பதிவுதான்!


ஆழ்வார்
'வரலாறு' படைத்த 'தல'யின் அடுத்த பரிமாணம். புது இயக்குனரின் கீழ் ஆழ்வாராக வந்து சமுதாயத்தில் களை புடுங்குகிறார். ஐயராக இருந்தவர் பிண அறையில் ஏன் வேலை செய்கிறார் என்ற காரணம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு அவதாரமாக வேஷம் போட்டுக்கொண்டு போவதிலும் லாஜிக் இடிக்கிறது. போலிஸ் கொலைகாரனை கண்டுப்பிடிப்பதில் பெரிய பரப்பரப்பு இல்லை.

அதிகம் பேசாமல், முகத்தை இறுக்கி வைத்துக் கொண்டு நடித்திருக்கிறார். பாடல் காட்சியில் சிரித்து மனதை அள்ளுகிறார். பாலாவின் 'நான் கடவுள்' படத்திலிருந்து தான் நீக்கப்பட்டதை ரொம்பவும் நினைத்து வருந்தியிருக்கார் நம்ம தல. அதான், "கடவுள்.. நான் கடவுள்" என்ற வசனங்களும், கடவுளாக அவதாரம் எடுத்து கெட்டவர்களை அழிக்கிறார் போலும்.

அசின் - கீர்த்தி சவ்லா - படத்தில் அஜித்துக்கு 2 நாயகிகள். ஆனாலும் காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக இல்லை. விவேக்கின் அதே பழைய பானி காமெடி - சிரிக்க முடியவில்லை. பாடல்களும், பாடல் காட்சிகளும் நன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது.

செல்லா இயக்குனராக ஒரு பலமான கதையை இறக்கியிருக்கலாம். அஜித் தைரியமாக ஒரு புது இயக்குனரை நம்பி செல்லாவுக்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறார். அசின் இனி கதையை கேட்டு, தீர விசாரித்து ஒப்புக்கொள்வது நன்று.



போக்கிரி

தெலுங்கு ரீமேக் என்பதால் பார்க்க வேண்டும் என்ற ஆசையிலாத படம்தான். ஏற்க்கனவே நான் மகேஷ் பாபு - இல்லியனா நடித்த போக்கிரியை பார்த்தவள்.

ஆனாலும், தமிழில் கொஞ்சம் அதிகப்படியாக மசாலாக்களை சேர்த்து ருசியான ஒரு சமயலை செய்து கொடுத்திருக்கிறார் பிரபு தேவா. விஜயின் நடை - உடை - பாவனை.. அனைத்தும் மகேஷுக்கு சொந்தமானவை. அசின் - இல்லியானா கேரக்டர் அச்சு அசல் அதேதான்.

விஜய் க்ளைமேக்ஸ் பகுதியில் போலிஸ் ட்ரஸ்ஸில் பார்க்க சகிக்கலை. காக்கி சட்டை இவருக்கு பொருத்தமில்லை. மகேஷுக்கும் இது பொருத்தமில்லைதான். அதான் அவர் பிரகாஷ் ராஜை (தெலுங்கிலும் இவரேதான்) கொல்ல போகும்போது காக்கி சட்டையில் போகவில்லையே!!! இவர் மட்டும் ஏன்? ரெண்டு படத்துக்கும் வித்தியாசம் காட்ட இவர் எடுத்த முயற்சியோ???

அசின் - விஜய் காதல் ரசிக்கும் ரகம் (தெலுங்கு ஜெராக்ஸ்தான்).. அதைவிட, வைகைபுயல் வடிவேலு குங்ஃபு மாஸ்டராய், பிச்சைகாரனாய், பல்லனாய், சுட்டும் விழி சுடரே பாட்டுக்கு அசினுடன் ஆடும் சன்ஜய் ராமசாமியாய் கலக்கிட்டாரு.

பிரகாஷ் ஜெயிலில் பண்ணும் கூத்து ரசிக்கலாம். ஆனாலும் இதுவும் தெலுங்கிலிருந்து சுட்டதுதான். அசின் அழகு. கொடுத்த ரோலை கச்சிதமாக செய்திருக்கிறார்.

படத்தில் இன்னொரு ப்லஸ் பாடல் காட்சிகள். பிரபு தேவா அல்லவா!!! நீ முத்தம் ஒன்று, வசந்த முல்லை பாடலும், காட்சிகளும் அருமை.

மொத்தமாக சொன்னால், தெலுங்கு போக்கிரியை தமிழ் போக்கிரி சாப்பிட்டு முழுங்கிவிட்டார் என்று சொல்லலாம். ஆனாலும், விஜய் இப்படி ரீமேக்களை செய்து மற்றவர்களின் வியர்வையை தன் வெற்றியாகிக்க கூடாது.



தாமிரபரணி

கெட்டவன் என்ற பட்ட பெயரை ரொம்பவும் பெருமையாக நினைப்பவன்.. தன் மாமாவை யார் மரியாதை குறைவாக பேசினாலும், அவர்களை உண்டு இல்லைன்னு பண்ணும் இளஞனாக பரணி @ விஷால். குடும்ப பாசத்தையும் நெசத்தையும் வலியுறுத்தும் இந்த படத்தில் சண்டை காட்சிகளுக்கும் குறைவில்லை.

விஷால் முதன் முறையாக இந்த படத்தில் காமெடி ட்ராக்கையும் செய்திருக்கிறார். பானுவை பழி வாங்குவதற்க்காக சென்னைக்கு கூட்டிட்டு வந்து, ஆனால், பானு நீ ஐ லவ் யூ சொன்னால்தான் திரும்புவேன் என அடம்பிடிக்க, விஷால் மாயி ஸ்டைலில் பேசுவதும், கல்யாண வீட்டுக்கு வழி கேட்கும் நதியாவை விஷால் இறந்துபோன கல்யாணம் வீட்டுக்கு வழி காட்டி அங்கே நடக்கும் கூத்துக்களும் அருமை.

பிரபு - ரோஹினி (அண்ணன் தங்கையாகவும்), நாசர் - நதியா - நிழல்கள் ரவி - ஆகாஷ் (சகோதரர்களாகவும்), விஜயகுமார் இவர்களது தந்தையாகவும், பிரபு - நதியா (பிரிந்து வாழும் தம்பதியர்களாகவும்), விஷால் (ரோஹினியின் மகனாகவும்), பானு (நதியா - பிரபுவின் மகளாகவும்), மனோரமா (பிரபு - ரோஹினியின் தாயாகவும்) --> ஒரு பெரிய பட்டியலே நடித்திருகின்றனர்.

"ஒரு வார்த்தை கேட்க ஒரு வருடம் காத்திருந்தேன்" என்ற இந்த பாடலை வைத்து கஞ்சா கருப்பு செய்யும் கமெடியும் ரசிக்க வைக்கிறது.

படத்தின் கிளைமெக்ஸில் எப்படி நதியா திருந்துகிறார்? விஷால் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தாலும், அந்த கொலை செய்தது அவரில்லை.. பிறகு யார்தான் செய்தது?? ஜெயிலில் இருந்து விடுதலையாகும் விஷாலை கொலை செய்ய நாசரும், விஜயகுமாரும் திட்ட போடுகின்றனர்.. அது நிறைவேறியதா? விஷால் - பானு திருமணம் நடந்ததா??

நான் பார்த்த இம்மூன்று படங்களில் தாமிரபரணிக்குதான் முதலிடம்.

குரு

இன்னும் பார்க்கவில்லை.. அதனால், இந்த லிஸ்டில் சேர்க்கப்படவில்லை.


ஒலிச்சித்திரம்

இது பொங்கல் ரிலீஸ் இல்லை. 2005-ஆம் ஆண்டு மலயாளத்தில் வெளியான பை தே பீப்பல்(By The People) என்ற படத்தின் டப்பிங். பெயர் எங்கோ கேட்டதுபோல் இருக்கிறதா? 4 தே பீப்பல் [4 The People] (மலயாளம்) / 4 ஸ்டூடண்ஸ் [4 Students] (தமிழ்)-இன் இரண்டாம் பகுதிதான்.

படத்தின் முதல் சில காட்சிகள் 4 ஸ்டூடண்ஸின் க்ளைமேக்ஸ் காட்சிகள். அவர்கள் போலிசாரால் அடிப்பட்டு ஜீப்பில் ஏர்ரப்படும் நேரத்தில் இன்னொரு 4 பேர் அந்த கெட்டவனை சுட்டு விட்டு ஓடுவார்கள். நினைவிருக்கிறதா? அந்த 4 பேர்தான் இந்த படத்தின் நாயகர்கள்.
சித்திரம் பேசுதடி நரேன் இந்த 2 படத்திலும் இவர்களை பிடிக்கும் கமிஷ்னராக வருகிறார். ஆனால் ஒரு சின்ன திருப்பம்.. இந்த படத்தில், இவர்தான் அந்த பை தே பீப்பல் குழுக்கு உதவுகிறார்.

இந்த படத்திலும் பை தே பீப்பல் இறந்துவிடுகின்றனர்.. இவர்களை ஈடுகட்ட இன்னொரு 5 பேர் வருகின்றனர்.. 3 கல்லூரி மாணவர்கள் (2 ஆண் & 1 பெண்), 1 ஆட்டோ ட்ரைவர், 1 கூலி வேலை செய்பவன். இவர்களும் அவர்களது கடைசி கொலையை செய்ய திணற, எப்படி 4 தே பீப்பல் வந்து அதை முடிகின்றனர் என்பதுதான் க்ளைமேக்ஸ்..

Saturday, January 20, 2007

157. அவசர பதிவில் சஸ்பன்ஸ் உடைப்பு!!!!

இது ஒரு அவசர பதிவு!!!!

சஸ்பென்ஸ் என்னன்னு நேற்று சொல்கிறேன் என்று சொன்னேன். டைம் கிடைக்காமல், கொட்ட கொட்ட விடியக்காலை 3 மணிக்கு இதை எழுதுகிறேன். (பலர் பலவாராய் கற்பனை செய்துள்ளீர்கள். சிலர் விஷயத்தை கண்டுபிடித்துவிட்டேன் என்று நிறைய கற்பனை செய்து என் மின்னஞ்சலுக்கு அனுப்பினீர்கள்)...

என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம்:

1- எனக்கு வேலை கிடைத்தது (வேலை கிடைக்கிறது சாதாரண விஷயம்தானேன்னு நீங்க நினைக்கலாம்.. ஆனால், என்னுடைய நிலையில் இப்போது இருப்பவர்கள் இதை நினைத்து கூட பார்க்கமுடியாத ஒன்று. இதன் விரிவாக்கம் அடுத்த பதிவில்)

2- என் தம்பி நாடு திரும்பியது (இப்போதுதான் விமான நிலயத்திலிருந்து வீடு திரும்பினோம். வந்ததும் அவசரமாய் சுருக்கமாய் இந்த பதிவு எழுதுகிறேன்)

3- மூன்றாவதாகவும் ஒன்று இருக்கிறது. இதே நாளில்தான் என்னுடைய பிராக்டிக்கலை முடித்துள்ளேன்.

இன்று காலை நான் பினாங்கு செல்ல இருக்கிறேன். 3 நாட்களுக்கு பிறகுதான் திரும்பி வருவேன். அப்போது வந்து இந்த விஷயத்தை விரிவாய் எழுதுகிறேன்.

நீங்கள் எழுதிய பின்னூட்டங்களுக்கு நன்றி.. வந்ததும் பதில் எழுதுகிறேன்.

(உங்கள் வசதிக்காக கமெண்ட்ஸ் மோடெரேஷனை டிஸ்-ஏபல் செய்துள்ளேன்..)

Monday, January 15, 2007

156. என்னன்னு நான் சொல்ல...

மார்கழி கழிஞ்சாச்சி..
போகி போயாச்சு..
தை பொறந்தாச்சு..
தமிழர் திருநாள் வந்தாச்சு..

உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!உங்கள் பொழுதும், இனி வரும் நாட்களும் சர்க்கரை பொங்கல் போல் இனிக்க இறைவனை வேண்டுகிறேன்.


அருண்.. சர்க்கரை பொங்கல் கேட்டிருந்தீங்களே!! இன்னைக்கு எங்க வீட்டில் செய்த பொங்கல் இதோ! நன்றாக ருசித்து சாப்பிடுங்கள். நண்பர்களே! இது உங்களுக்கும்தான்.. நிறையவே இருக்கு! எல்லாரும் சாப்பிடலாம் வாங்க..

வருடப்பிறப்பின் போது என்னுடைய ஒரு பதிவு தமிழ்மண பூங்காவில் இடம் பெற்றது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. இது உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததே!

ஆனால் பொங்கல் தினத்திலும் நான் பேரானந்தத்துடன் இருக்கிறேன். ஒரு நல்ல வாய்ப்பு (நீங்களே ஏதாவது கற்பனை பண்ணீக்காதீங்க!!) என்னை தேடி வந்தது. Yes or No என்று நான் சொல்ல வேண்டியதுதான் மீதி..

இன்னும் நான் முடிவை சொல்லவில்லை. ஆனாலும், இவ்வளவு சீக்கிரமாக ஒரு வாய்ப்பா என்று நானே திகைத்து நிக்கிறேன். இன்னும் அதிலிருந்து மீளவில்லை.

அது என்னன்னு தெரியனுமா? நான் Yes or No என்று இந்த வார வெள்ளியன்று பதிலை சொல்லிவிட்டு முழு கதையையும் (அய்யயோ! இது கதையில்லை.. நிஜம்) எழுதுகிறேன். ஏன் வெள்ளி? நடுவில் 4 நாட்கள் இருக்கேன்னு கேட்கிறீர்களா? அன்று இன்னொரு சந்தோஷமான.. இல்லை இல்லை.. இரண்டு சந்தோசமான விஷயங்களும் நடக்கவிருக்கிறது. அது மட்டுமில்லை. என் சீனியர் இஞ்சீனியர் இந்த வாரம் புது வகை ஆணியை எப்படி புடுங்குறதுன்னு சொல்லி கொடுக்கபோறாரு. அப்போ! இன்னும் 4 நாள் உங்கள் தோழி பிஸியோ பிஸி!!

பி.கு: (என்னுடைய வலை எனக்கொரு டைரியை போன்றது! அதுனால்தான், என்னுடைய சந்தோசம் துக்கம் எல்லாவற்றையும் இதில் எழுதுகிறேன்.)

Sunday, January 14, 2007

155. மேகமே.. நீ ஊர்சுற்றப் போவதெங்கே??

ஆண்களின் கனவுகள் லட்சியமானது..
பெண்களின் கனவுகள் ரகசியமானது..
இது ஒரு கவிஞர் எழுதிய வரி..

உண்மையிலேயே பெண்கள் நிறைய கனவுகள் காண்பார்கள். அவைகளை ரகசியமாக வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் பாடக்கூடிய பாடல்கள் நாம் சில படங்களில் பார்த்துள்ளோம்.

இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு பாடலைத்தான் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.

படத்தின் பெயர் வனம் வசப்படும். ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் முதன் முதலாக இயக்குனராகிய படம். நான் முன்பே சொல்லியதுபோல் ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகும்பொழுது, ஒவ்வொரு காட்சியும் கவிதையாக இருக்கும்.. அதேபோல்தான் இந்த படமும்..

ஒரு பணக்கார பெண், தனக்கென்ற சின்ன சின்ன கனவுகளை வைத்திருந்தாள். ஆசைப்பட்டவனையும் மணந்தாள். பாசமுள்ள கணவன், அன்பான மாமியார்-மாமனார்.. ஆனாலும், அந்த சந்தோஷமான சூழலில் அவள் வாழ முடியவில்லை. இரண்டு விடலை பசங்கள் அவளின் கற்பை சூரையாடினர். அதன் பிறகு அவளின் நிலை என்ன? விவகாரம் நீதிமன்றத்துக்கு கொண்டு போனதும் அங்கே என்ன நடந்தது? தன் கணவன் அதன் பிறகும் அவளை அன்புடன் கவனித்தானா? அவளால் அந்த சூழ்நிலையில் இருந்து அவளால் மீள முடிந்ததா?

நல்ல ஒரு கதையை கொடுத்த இயக்குனர்.. அருமையான ஒரு இசையமைப்பாளரையும் தேர்தெடுத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.. புற்று நோயால் அவதிப்பட்டுகொண்டிருந்த மகேஷ்தான் இசையமைப்பாளர். ஒவ்வொரு பாடல்களுக்கும் வித்தியாசமாக உருவம் கொடுத்திருந்தார்.

மேகமே மேகமே என்று ஆரம்பிக்கும் அந்த பெண்ணின் கனவை வார்த்தைகளாக கொண்டு வந்தவர் கவிபேரரசு வைரமுத்து. ஹரிணிதான் இந்த பாடலை பாடியவர். அவரின் குழந்தை தனமான அந்த குரல் இந்த பாடலுக்கு ரொம்பவும் பொருத்தமாக இருந்தது.

பாடலை நீங்கள் இங்கே கேட்கலாம்:



மேகமே.. மேகமே..

மேகமே மேகமே மேகமே..
ஊர் சுற்ற போவதெங்கே..
பூமியில் என்னவன் யாரவன்..
கண்டதும் சொல்க இங்கே..
கலைஞனோ.. ரசிகனோ..
காதல் ஓவியனோ..
மலர்களை சாவியின்றி..
திறக்கும் சூரியனோ..
(மேகமே...)

எனக்கென்று சாம்ராஜ்யம்.. எனக்கென்று ராஜாங்கம்..
எனக்கான செங்கோல் எங்கே?
எனக்கான கைக்குட்டை.. எனக்கான உள்ளாடை..
துவைக்கின்ற ராஜா எங்கே?
எனக்கு முன்னே பிறந்தவன்தான்
எங்கே நீ கூறு..
எனை கண்டுதான் பயந்தொழிந்தான்
கொஞ்சம் நீ தேடு..
பகலிலே தலைவனை நிழலாய் அடைந்திருப்பேன்..
இரவிலே அவனையே உடையாய் அணிந்திருப்பேன்..
(மேகமே...)


உடல் தேவை.. அது தீர்த்து..
மனத்தேவை அது.. தீர்க்க..
எனக்கேற்ற ஜோடி உண்டா..
நிறைமாத நிலவைப்போல்
பிறைகூட அழகென்று
ரசிக்கின்ற ரசனை உண்டா..
முதுமை வரை காதலிக்கும்
ஆளை நீ பாரு..படுக்கையிலே விடுமுறைகள்
வேண்டும் எனக்கூறு..பெண் மனதை படித்தவனா..
சரியாய் பார்த்து விடு..
நீர்துளியால் அச்சதையை
நீயே சேர்த்துவிடு..
(மேகமே...)

இதே மாதிரி ஒரு பாடலை சின்ன குயிலும் பாடியிருப்பார். இவர் பாடியது தன் கனவு நாயகனை பார்த்தவுடன்..

//எனக்கு முன்னே பிறந்தவன்தான்
எங்கே நீ கூறு..
எனை கண்டுதான் பயந்தொழிந்தான்
கொஞ்சம் நீ தேடு..//
இதே போல் வரிகளும் அந்த பாடலில் வரும். உங்களால் கண்டு பிடிக்க இயலுமா?

154. இந்த பொங்கலுக்கு உங்கள் சாய்ஸ் எது?

இந்த ரெண்டு படத்துக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா?


விஜய் பாடல் காட்சில வித்தியாசமா வந்துட்டா படத்துல வித்தியாசமா ஒரு கெட்-அப் போட்ட திருப்தி கிடைத்திருமா?

அஜித் வாலி பத்துல இருந்ததைபோல இளமையாயிட்டார். படமும் அவருடைய முந்தைய படங்களைப்போல் வசூலை அள்ளி குவிக்கவேண்டும்.

ரெண்டு படத்திலேயும் கலக்கலா இருப்பவர் நம்ம அசின்தான். 2005 தீபாவளியில் சிவகாசி - மஜான்னு இரட்டிப்பு மகிழ்சியில் இருந்தார். இப்போது இவருக்கு இரட்டிப்பு பொங்கல் கொண்டாட்டம்தான்..


இப்போது இந்த ரெண்டு படத்துக்கும் உள்ல வித்தியாசம் உங்களுக்கு தெரியுதா?


ரெண்டுமே சண்டைப்படம்தான். ரத்த ஆறு ஓடப்போகிறது இந்த படங்களில்.

நம்ம கார்த்திக்கு இதுதான்முதல் படம். அமீரின் இயக்கம் என்பதால், பையன் ஏதோ சாதிதிடிருபான் என்று எதிர்பார்க்கலாம். உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அமீர் தன்னோட படத்துல ஹீரோ ஆகபோறேன்னு சொன்னரே! இந்த படம்தான். கார்த்தியை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை பாருங்க. முடி ஸ்டைலும், தாடியும், அவர் கத்தும்போது ஃபேசியல் எக்ஸ்பிரஷன் எலாம் அமீரை போலவே இருக்குல்ல?

விஷாலுக்கு இன்னொரு சண்டைகோழி இது. அதே செம்மணிலொரு கிளைமெக்ஸ் சண்டைக்காட்சி. நம்ம மகாலட்சுமி (அதாங்க குமரனின் அம்மா நதியா) & பிரபு, ஹரியோட இயக்கத்துல நடிச்சிருக்காங்க.

இப்ப நீங்க முடிவு பண்ணுங்க.. சண்டைகோழியா? அமீரின் சுயசரிதையா? போக்கிரி மகேஷை ஜெராக்ஸ் எடுத்து காப்பி அடித்திருக்கும் விஜயா? இல்ல என்ன கதைன்னு இன்னும் சஸ்பென்ஸா இருக்கும் ஆழ்வாரா? எது பார்கபோறீங்க?

என் சாய்ஸ்:
1- ஆழ்வார் & பருத்திவீரன் (எது ஃப்ர்ஸ்ட்ன்னு முடிவு பண்ண முடியவில்லை)
2- தாமிரபரணி
3- போக்கிரி (அசினுக்காக. தெலுங்கு போக்கிரியை பார்த்துவிட்டேன். ஜெராக்ஸ் எடுத்து திரும்பவும் ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும்ன்னா நாமக்கு வேலை வெட்டி இல்லாதபோதுதான் படிப்போம். அப்போதுதான் நான் இதை பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்.)

Sunday, January 07, 2007

153. சிகரம் தொட்ட பெண்மணி இவர்.. -2

பகுதி 1 இங்கே

தந்தைதான் என்று முடிவு செய்தார் இந்திரா. அதன்பின் அவர் ஃபெரோஸைச் சந்திப்பதே எப்போதாவது தான் என்று ஆகிவிட்டது. நேருவின் மறைவின் போதே இந்தியாவின் பிரதமராகி இருக்க வேண்டியவர் இந்திரா காந்தி; வயது, அனுபவம் அனைத்திலும் அவர் இளையவர் என்ற போதும் காங்கிரசில் அப்போது அவருக்கு ஆதரவாளர்கள் நிறைய பேர் இருந்தவர்கள்.


பயம் கலந்த பணிவு. மரியாதை கலந்த செயல்வேகம். அக்கறை மிக்க ஒருங்கிணைப்பு இம்மூன்றும் ஒரு சேர இருந்தது இந்திரா காலத்தில் தான். அப்படியொரு நேர்த்தியைக் கட்சிக்குள் கொண்டுவர அவர் கையாண்ட வழி முறைகள் குறித்த பல மாறுப்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. இந்திரா சமயத்தில் சர்வாதிகாரி மாதிரி நடந்து கொள்வார் என்றே கூட சொல்வார்கள். ஆனால், அவரது தன்னம்பிக்கைதான் அவரை எத்தகைய பிரச்சனையானாலும் உறுதிபடைத்த முடிவுகளை எடுத்துச் செயல் பட வைத்தது என்று அடித்து கூறலாம். பங்களாதேஷயுத்ததின் போதும் சரி, பஞ்சாப்பில் சீக்கியத் தீவிரவாதிகளை நசுக்கிய பொற்கோவில் சம்பவத்தின் போதும் சரி எத்தனையோ நெருக்கமான பலர் யோசித்துச் செய்யும்படி வற்புறுத்தியும் இந்திரா, தன் முடிவை மறுபரிசீலனை செய்யவே இல்லை. விளைவுகள் யோசித்துவிட்டுதான் அவர் செயலையே ஆரம்பிப்பார். ஆகவே எதைச் செய்யும்போதும் பதற்றம் என்பது கிடையாது அவருக்கு.

இந்திராகாந்தியின் பொதுவாழ்வில் அவசர காலம் ஒரு அழிக்க முடியாத கறையாகி விட்டபோதும் இன்னொரு முறையும் அவருக்கு ஆள்வதற்கு வாய்ப்பளிக்க மக்கள் தயங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவரது கம்பீரம், உறுதி, தீர்மானம், செயல்வேகம் ஆகியவை ஏற்படுத்தியிருந்த தாக்கம் அத்தகையது.

மிக இளம் வயதிலிருந்தே தன் வாழ்க்கையை தேசத்துக்காக அர்ப்பணித்த தலைவர்களின் பட்டியலில் கடைசிப்பெட்டியில் ஆர்.ஏ.சி. இடம் பிடித்தவர் இந்திரா. நேரம் முழுவதும் பொதுவாழ்க்கைக்குப் போய்விட்டதாலோ என்னவோ, தனிவாழ்வில் அத்தனை சுகமாக இருந்தார் அவர் என்று சொல்ல முடியாது. கணவரின் பிரிவு, இரண்டாவது மருமகளுடன் (மேனகா) தகராறு, சஞ்சய் காந்தி தன் வியாபாரம் மூலம் கொண்டு வந்து சேர்த்த நிறையத் தலைவலிகள். அவரே ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போன துயரம் என்று ரொம்பவே அவஸ்தைகள் அவருக்கு.

ஆனால், முகத்தில் எதையும் காட மாட்டார். தன் தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் தனக்குள்ளேயே புதைத்துக் கொள்கிற நெஞ்சுரம் அவருக்கு இயல்பாக இருந்தது.

ஆனால், பொதுவாழ்வில் வாழ்நாள் முழுவதும் தொட்ட அனைத்து விஷயங்களிலும் அநேகமாக வெற்றியே கண்ட இந்தியப்பிரதமர் என்றால் அது இந்திராதான் என்பதுகளில் பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்ப இந்திரா மேற்கொண்ட முயற்சியில் வெறுப்பு பெற்றிருந்த சீக்கியர்கள் மிக அதிகம்.

சீக்கியப் பிரிவினைவாதிகள் ஒழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் இந்திராவின் படு கொலையும். அவரைச் சுட்டுக் கொன்ற இரண்டு மெய்க்காவலர்களும், மேற்படி சீக்கியப் பிரிவினை வாதக்குழு அனுதாபிகள் அன்பது மிகவும் வெளிப் படையான விஷயம்.

அவரைப் போன்ற ஒரு செயல் திறன் மிக்க இரும்புப் பெண்மணி இன்றைக்கு வரை இந்தியாவில் உருவாகவேயில்லை.

Saturday, January 06, 2007

152. நீங்கள் இல்லை... ஆனால் நீங்கள்?

நீங்கள் அறிவாளி இல்லை... மற்றவர்களை முட்டாள் என்று சொன்னால்..
நீங்கள் அறிவாளி... உங்கள் அறிவு மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால்..

நீங்கள் பணக்காரர் இல்லை... மற்றவர்களை ஏழை என்று சொன்னால்..
நீங்கள் பணக்காரர்... உங்கள் பணம் நல்ல காரியங்களுக்கு உபயோகமாயிருந்தால்..

நீங்கள் அழகன் இல்லை... மற்றவர்களை அசிங்கம் என்று சொன்னால்..
நீங்கள் அழகன்... நீங்கள் தற்பெருமை அடிக்காமலிருந்தால்..

நீங்கள் நல்லவர் இல்லை... மற்றவர்களை கெட்டவர் என்று சொன்னால்..
நீங்கள் நல்லவர்... மற்றவர்களை நல்வழி பாதையில் திருத்த முயன்றால்..

நீங்கள் பக்திமான் இல்லை... மற்றவர்களை இறைவழிபாடு இல்லாதவர் என்று சொன்னால்..
நீங்கள் பக்திமான்... ஒவ்வொரு நாளிலும் சில நேரமாவது கடவுளுக்காக ஒதுக்கினால்..

நீங்கள் பலசாலி இல்லை... மற்றவர்களை பலம் குறைந்தவர் என்று சொன்னால்..
நீங்கள் பலசாலி... பலம் குறைந்தவர்களுக்கு உங்களால் ஆன உதவியை செய்தால்..

நீங்கள் வீரர் இல்லை.. மற்றவர்களை பயந்தாங்கொல்லி என்று சொன்னால்..
நீங்கள் வீரர்... மற்றவர்களுக்கும் நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவைப்படும்போது எதிர்த்து நிற்க்கும் துணிச்சல் இருந்தால்..

151. எனக்கும் கிடைத்தது ஊக்கத் தானிக்

இப்போதெல்லாம் தினமும் பதிவை எழுதமுடியாமல் போனாலும், உங்களைபோல நல்ல நண்பர்கள் கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

நான் தமிழில் எழுத ஆரம்பித்து முழுசா மூனு மாதம் கூட ஆகவில்லை. ஆனாலும் சிலரின் உசுப்பேத்தலால் தமிழ்மணத்திலும் தேன்கூடிலும் இணைந்தேன். அப்போதெல்லாம் தமிழ்மணம் நம் பதிவை போடுறதுக்கு மட்டும்தான்.. தேன்கூடில் மற்றவர்கள் எழுதும் கதைகளை படிக்க மட்டும்தான்-ன்னு நினைத்தேன்.

போன வாரம்தான் புதுசா ஒன்னு தெரிஞ்சுகிட்டேன். நம்ம கார்த்திக்தான் சொன்னார். ஏதோ என்னுடைய பதிவை தமிழ்மண பூங்காவில் பிரசுரித்திருக்கிறார்கள் என்று (நல்ல வேளை! அவரிடம் தமிழ்மண பூங்கா என்றால் என்ன என்று கேட்கவில்லை. கண்டிப்பாக மின்னஞ்சல் மூலமாக வந்தாவது ஏன்னை குட்டியிருபார் நம்ம தலைவர்!).உண்மையிலேயே தமிழ்மண பூங்கான்னு அப்போதுதான் கேள்விப் பட்டேன்.

உடனே தமிழ்மணம் வலையை திறந்து பூங்கவை தேடினேன். (இதுக்கு முன்னால் இதெல்லாம் தட்டி பார்த்திருந்தால்தானே தெரியும் எது என்க்கே இருக்குன்னு!).

கடைசியாக ஒரு வழியாய் கண்டுபிடித்தேன். என் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தேன். ஏதோ பெரிசா சாதிச்ச திருப்தி (இதெல்லாம் கொஞ்சம் ஓவர். என்னுடைய பதிவுகள் முக்கால்வாசி பூங்காவில் ஒவ்வொரு வாரங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றன. நானே இப்படி பதிவைபோட்டு பெருமிதப்பட்டதில்லை.. நீ மட்டும் என்ன? தற்பெருமையா?ன்னு நீங்கள் கேட்கலாம்). ஆனாலும், எனக்கு இதெல்லாம் புதுசுங்க.

நான் பள்ளியிலே படிக்கும்போது இந்த கட்டுரை எழுதுற பாடங்கள்ன்னாலே ஒரே வெறுப்பா இருக்கும். ஏன்தான் நம்மை எழுத சொல்லி கொல்றாங்களோன்னு ரொம்பவே சலிச்சுக்குவேன். கனவு காண்பது, அதை அழகாய் கதையாய் எழுதுவது என்பது எனக்கு சுட்டு போட்டாலும் வராத ஒன்று.

இங்கே நான் ஏதோ கிறுக்கிகிட்டு இருந்தேன். அப்படிப்பட்ட என்னுடைய பதிவு இங்கே பிரசுரிக்கப்பட்டது எனக்கு மிகவும் சந்தோஷமான ஒன்று. 2007-இல் எனக்கு கிடைத்த ஊக்க தானிக் இதுதான்.

ஆனாலும், நண்பர்களே! உங்களின் ஆதரவுகளை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். உங்களின் ஆதரவிலும், எனக்கு கொடுத்த ஊக்கத்திலும், எனக்கு எழுத, இந்த வலையை தமிழ்மணத்தில் பிரசுரிக்க உதவிய அனைவருக்கும் நன்றி.

Wednesday, January 03, 2007

150. தம்பிக்கு அக்கா எழுதும் மடல்.

தம்பி,

நீ எப்படி இருக்கிறாய்? பார்த்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. உன்னுடைய இந்த பிறந்த நாளில் நான்தான் முதலில் வாழ்த்தவேண்டும்.. அதுவும் வித்தியாசமாக வாழ்த்த வேண்டும் என்பதற்காகதான் இந்த மடல்.

நீ இந்த பிறந்த நாளில் மலேசியாவுக்கு பறந்து வந்துவிடுவாய் என்று நினைத்தேன். ஆனால், உன்னுடைய பிறந்த நாளில்தான் உன்னுடைய முக்கியமான / கடைசி பரிட்சை என்று அறிந்தேன்.

நீ மேதைடா. ஒவ்வொரு தடைகளையும் சுலபமாக தடைதெறிவாய்.. உன்னுடைய ஃப்லையிங் தெஸ்ட்-இல் சூப்பராக செய்து, அருமையான விமானி என்று நல்ல பெயரை சம்பாதித்து வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த வருடமும், இனி வரும் வருடங்களிலும் உனக்கு சூப்பராக அமைந்து எல்லா வெற்றிகளையும் பெற என் வாழ்த்துக்கள்.
நீ சீக்கிரமே மலேசியா வர வேண்டும்.

நாளை உன் பிறந்த நாளாய் இருந்தாலும், நான் இப்போதே உனக்கு வாழ்த்து சொல்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இன்று இரவு உன் கைத்தொலைபேசிக்கு அழைக்கிறேன். (எப்போதும் போல உன் கைதொலைபேசியில் தொங்கிட்டு இருக்காதே. இன்னைக்காவது அதை ஃப்ரீயா விடு. அப்பதான் நாங்கள் உன்னை தொடர்பு கொள்ளமுடியும். ஹீ ஹீ ஹீ).

மற்றவை இன்று இரவு தொலைபேசியில் பேசிக்கலாம்..:-)

அன்புடன்,
உன் அக்கா.

149. 2007-இல் நான்

2006 முடிந்தது. புத்தாண்டு பிறந்தது. 2007 வந்தது.

ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும்போது பலர் பல திட்டங்களை தீட்டுவார்கள். அதில் மிக சிலரே போட்ட திட்டங்களை நிறைவேற்றுவர். பலர் அதே திட்டங்களை புது வருடத்துக்கு ஒத்தி வைப்பார்கள்.
நான் புது வருடம் ஆரம்பிக்கும்போது திட்டங்களை போடுவதில்லை. நமக்கு அதெல்லாம் ஒத்து வராத விஷயம். கஜினி சூர்யா அளவுக்கு ஞாபக மறதி எனக்கு முத்தி போகாட்டினாலும்.. எனக்கும் ஞாபக மறதி அதிகம். ரெண்டு படத்தில் நடித்த தேவதர்ஷினி கேரக்டர் போலவே.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருக்கும் நான் போட்ட திட்டங்களை போட்ட அன்னைக்கே மறந்துவிடுவது சகஜம். அதனால், குறுகிய கால திட்டங்களையே அதிகமாக போடுவேன் நான். போட்டதை என் கணிணியின் டெஸ்க்டோப்பில் ஒட்டிவைப்பதும் வழக்கம். (இந்த சாஃப்ட்வேரை பற்றி ஒரு நாள் எழுதுகிறேன். ;-))

அதனால் சுற்று வட்டார மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், என்னுடைய புது வருடம் திட்டம் என்ன என்று கேட்காதீர்கள். ஏனென்றால், அப்படி எதுவும் எனக்கு இல்லை. ஹீ ஹீ ஹீ..

ஆனாலும் வருட இறுதியில் நான் சாதித்த, சந்தோஷப்பட்ட, வருத்தப்பட்ட நிகழ்வுகளை நான் எப்போதுமே பின்னோக்கி பார்ப்பது வழக்கம். அவைகளை டிசம்பர் 31-இல் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. டிசம்பர் 31 ஹஜ்ஜி பெருநாளாகவும் இருந்த்தால் நான் என் பெற்றோருக்கு உதவியாய் கடையில் இருந்ததுதான் காரணம். ஜனுவரி 1, 2 முடிந்து இப்போது மூன்றும் பிறந்துவிட்டதால் 2006-இல் நடந்த நிகழ்வுகளை பதிவாய் போடுவது இப்போது டூ லேட்-ன்னு கருதுகிறேன்.

ஆனால், அதில் ஒன்றை கண்டிப்பாக உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்த ப்ளாக்-தான். இந்த ப்ளாக்கின் மூலமாகத்தான் உங்களைப்போல் அருமையான நண்பர்கள் கிடைத்துள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்து பலவகையான கேரக்டரை கொண்ட நண்பர்கள். ஒவ்வொருவரும் தரும் இந்த ஆதரவால்தான் என்னுடைய இந்த ப்ளாக் 150-ஆவது பதிவை தொட வழிவகுத்துள்ளது.

நான் ஒரு தனிமை விரும்பி. இந்த தனிமையிலும் என் நேரத்தை நல்வழியில் செலவழிக்கவும், என்னுடைய தமிழ் மொழியை வளர்க்கவும் இது உதவியாய் இருந்தது; இருந்துகொண்டிருக்கிறது; பிற்காலத்தில் இருக்கும் என நம்புகிறேன்.

எப்போதும் போல மனதில் ஓடும் எல்லா விஷயங்களை பற்றியும் எழுதினேன்... எழுதுகிறேன்.. இனிமேலும் எழுதுவேன்.. அதை நீங்கதான் பொருத்துக்கனும்..

நேற்று வயிற்று வலியால் இரவு தூக்கம் வராமல் வெகு நேரம் கட்டிலில் புரண்டு படுத்திருக்கும்போது, இந்த 2007-இல் முதல் பதிவில் ஏதாவது புதிதாய் எழுதனும்னு நினைத்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு கவிதை எழுதலாம்ன்னு நினைத்தேன். கவிதை படிப்பதும் எழுதுவதும் விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. எழுவதுக்கு நல்ல தமிழ் சொற்களும் மனதில் இல்லை. இந்த நிலமையிலும் ஏதாவது எழுதியாகனும்ன்னு ஒதோ இந்த கவிதையை எழுதினேன்.

கவிஞர்களே! நீங்க இதை படித்துவிட்டு நன்றாக துப்பதான் போறீங்கன்றது கன்ஃபார்ம் ஆகியாச்சு. என்ன பன்றது! துப்புறதுக்குதான் கமெண்ட்ஸ் பக்கம் இருக்கே! நல்லா துப்புங்கள். ;-)


நான் நீராக இருந்தால்..
என் காதலில்
கலந்து சங்கமமாக வா
என் காதலி..

நான் நெருப்பாக இருந்தால்..
என் காதல் நெருப்பில்
குளிர் காய வா
என் காதலி..

நான் காற்றாக இருந்தால்..
என் காதல் புயலில்
சேர்ந்து பறக்கவா
என் காதலி..

நான் நிலமாக இருந்தால்..
என் பரந்த இதயத்தில்
காதலை நட வா
என் காதலி..

நான் ஆகாயமாக இருந்தால்..
என் உயர்ந்த காதலை
கட்டி உன் மனதுக்கு இழுக்க வா
என் காதலி..