Sunday, January 14, 2007

155. மேகமே.. நீ ஊர்சுற்றப் போவதெங்கே??

ஆண்களின் கனவுகள் லட்சியமானது..
பெண்களின் கனவுகள் ரகசியமானது..
இது ஒரு கவிஞர் எழுதிய வரி..

உண்மையிலேயே பெண்கள் நிறைய கனவுகள் காண்பார்கள். அவைகளை ரகசியமாக வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் பாடக்கூடிய பாடல்கள் நாம் சில படங்களில் பார்த்துள்ளோம்.

இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு பாடலைத்தான் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.

படத்தின் பெயர் வனம் வசப்படும். ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் முதன் முதலாக இயக்குனராகிய படம். நான் முன்பே சொல்லியதுபோல் ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகும்பொழுது, ஒவ்வொரு காட்சியும் கவிதையாக இருக்கும்.. அதேபோல்தான் இந்த படமும்..

ஒரு பணக்கார பெண், தனக்கென்ற சின்ன சின்ன கனவுகளை வைத்திருந்தாள். ஆசைப்பட்டவனையும் மணந்தாள். பாசமுள்ள கணவன், அன்பான மாமியார்-மாமனார்.. ஆனாலும், அந்த சந்தோஷமான சூழலில் அவள் வாழ முடியவில்லை. இரண்டு விடலை பசங்கள் அவளின் கற்பை சூரையாடினர். அதன் பிறகு அவளின் நிலை என்ன? விவகாரம் நீதிமன்றத்துக்கு கொண்டு போனதும் அங்கே என்ன நடந்தது? தன் கணவன் அதன் பிறகும் அவளை அன்புடன் கவனித்தானா? அவளால் அந்த சூழ்நிலையில் இருந்து அவளால் மீள முடிந்ததா?

நல்ல ஒரு கதையை கொடுத்த இயக்குனர்.. அருமையான ஒரு இசையமைப்பாளரையும் தேர்தெடுத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.. புற்று நோயால் அவதிப்பட்டுகொண்டிருந்த மகேஷ்தான் இசையமைப்பாளர். ஒவ்வொரு பாடல்களுக்கும் வித்தியாசமாக உருவம் கொடுத்திருந்தார்.

மேகமே மேகமே என்று ஆரம்பிக்கும் அந்த பெண்ணின் கனவை வார்த்தைகளாக கொண்டு வந்தவர் கவிபேரரசு வைரமுத்து. ஹரிணிதான் இந்த பாடலை பாடியவர். அவரின் குழந்தை தனமான அந்த குரல் இந்த பாடலுக்கு ரொம்பவும் பொருத்தமாக இருந்தது.

பாடலை நீங்கள் இங்கே கேட்கலாம்:



மேகமே.. மேகமே..

மேகமே மேகமே மேகமே..
ஊர் சுற்ற போவதெங்கே..
பூமியில் என்னவன் யாரவன்..
கண்டதும் சொல்க இங்கே..
கலைஞனோ.. ரசிகனோ..
காதல் ஓவியனோ..
மலர்களை சாவியின்றி..
திறக்கும் சூரியனோ..
(மேகமே...)

எனக்கென்று சாம்ராஜ்யம்.. எனக்கென்று ராஜாங்கம்..
எனக்கான செங்கோல் எங்கே?
எனக்கான கைக்குட்டை.. எனக்கான உள்ளாடை..
துவைக்கின்ற ராஜா எங்கே?
எனக்கு முன்னே பிறந்தவன்தான்
எங்கே நீ கூறு..
எனை கண்டுதான் பயந்தொழிந்தான்
கொஞ்சம் நீ தேடு..
பகலிலே தலைவனை நிழலாய் அடைந்திருப்பேன்..
இரவிலே அவனையே உடையாய் அணிந்திருப்பேன்..
(மேகமே...)


உடல் தேவை.. அது தீர்த்து..
மனத்தேவை அது.. தீர்க்க..
எனக்கேற்ற ஜோடி உண்டா..
நிறைமாத நிலவைப்போல்
பிறைகூட அழகென்று
ரசிக்கின்ற ரசனை உண்டா..
முதுமை வரை காதலிக்கும்
ஆளை நீ பாரு..படுக்கையிலே விடுமுறைகள்
வேண்டும் எனக்கூறு..பெண் மனதை படித்தவனா..
சரியாய் பார்த்து விடு..
நீர்துளியால் அச்சதையை
நீயே சேர்த்துவிடு..
(மேகமே...)

இதே மாதிரி ஒரு பாடலை சின்ன குயிலும் பாடியிருப்பார். இவர் பாடியது தன் கனவு நாயகனை பார்த்தவுடன்..

//எனக்கு முன்னே பிறந்தவன்தான்
எங்கே நீ கூறு..
எனை கண்டுதான் பயந்தொழிந்தான்
கொஞ்சம் நீ தேடு..//
இதே போல் வரிகளும் அந்த பாடலில் வரும். உங்களால் கண்டு பிடிக்க இயலுமா?

5 Comments:

said...

//
மலர்களை சாவியின்றி..
திறக்கும் சூரியனோ..
//
சூப்பர். நல்ல சிந்தனை. வைரமுத்து ஆச்சே...

//
வனம் வசப்படும்
//
வானம் தானே? typoவா?


நல்ல பாடலை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி தோழி

இன்னைக்கு நான் சீக்கிரமே வந்த மாதிரி தெரியுது.என்ன ஒரு ஆச்சர்யம் !!!
அதனால சுடச்சுட சக்கரைப் பொங்கலை மலேசியாவுல இருந்து இங்க அனுப்பி வச்சுடுங்க :)

said...

என் தோழி,

நல்ல பாடல். ஒரு சின்ன திருத்தம்.

//படத்தின் பெயர் வனம் வசப்படும். ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் முதன் முதலாக இயக்குனராகிய படம். //

ஸ்ரீராம்: முதல் படம் மீரா (விக்ரம் நடித்தது, ஓ! பட்டர்பிளை, பட்டர்பிளை பாடல் கேட்டிருக்கிறீர்களா, அதுதான்), இரண்டாவது படம்: குருதிப்புனல், வானம் வசப்படும் - மூன்றாவது படம். சரியா தோழி?

said...

//இன்னைக்கு நான் சீக்கிரமே வந்த மாதிரி தெரியுது.//

அமாங்க அருண். எழுதி முடித்து கொஞ்ச நேரத்திலேயே நீங்கள் வந்துவிட்டீர்.

அதான், பொங்கல் திருநாளன்று பொங்க வச்சுட்டு உங்களுக்கு அனுப்பலாம் என்று காத்திருந்தேன். இனிப்பான சர்க்கரை பொங்கல் உங்களுக்கு கிடைத்ததா?

said...

//ஸ்ரீராம்: முதல் படம் மீரா (விக்ரம் நடித்தது, ஓ! பட்டர்பிளை, பட்டர்பிளை பாடல் கேட்டிருக்கிறீர்களா, அதுதான்), இரண்டாவது படம்: குருதிப்புனல், வானம் வசப்படும் - மூன்றாவது படம். சரியா தோழி? //

ஸ்ரீராம்தான் மீராவை இயக்கினார் என்று தெரியாது.. ஆனாலும், குருதிபுனலை இவர் இயக்கியதை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. ;-)

ஞாபகப் படுத்தியதுக்கு நன்றி, "நான்". :-)

said...

அன்பு தோழி..

உங்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அருமையான பாடல்வருகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.