ஒரு நிமிடம் என்னை திடுக்கிட வைத்த வார்த்தைகள்..
போன வாரம் இதே நாளில் ஒரு புத்தக கடையில் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தபோது அந்த குரல் என் பக்கத்தில் ஒளித்தது.
இதில் என்ன அப்படி ஆச்சர்யம்.. திகைப்புன்னு நீங்க கேட்கலாம் (கேட்காட்டினாலும் நாங்க சொல்லுவோம்ல.. ) வேலைக்காக நான் தினமும் மலேசியாவின் தலைநகரம் (சுந்தர் சி நடிச்ச படமில்லைங்க) குவாலா லும்புருக்கு பயணம் செய்வேன். எனது பிரயாணத்தில் தினமும் பல நூறு பேரை சந்திக்கிறேன். அதில் பலர் இந்தியர்கள் அல்லது மலேசிய தமிழர்கள் ஆவர்.
இதில் பாதி பேருக்கு தமிழே தெரியாது. மீதி உள்ளவர்களுக்கு தமிழ் தெரிந்தாலும், ஆங்கிலத்திலேயே பேசுவாங்க. எல்லாம் ஸ்டைலும் வெட்கமும்தான் காரணம். நம் தாய் மொழியில் பேச எதற்க்கு வெட்கம் என்று நானே சிலரிடம் பலமுறை கேட்டிருக்கிறேன்.
நானே தமிழில் புலவி என்றெல்லாம் சொல்ல வரலைங்க. எனக்கு இருக்கும் தமிழ் அறிவும் கொஞ்சம் கொஞ்சம்தான். நான் தமிழ் பேசும்போதே என்னையும் அறியாமல் மலாயும் ஆங்கிலமும் கலந்து வரும். முடிந்தவரை அப்படி பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
சரி, சொல்ல வந்த விஷயம் வேற.. இப்போ வேற எதையோ பேசிட்டு இருக்கேன் பாருங்க..
கே.எல் பட்டணத்தில் இப்படி தமிழில் பேசி நான் கேட்பது ரொம்ப அபூர்வம்தான். அதுவும் சுத்த தமிழில் அழகாய் ஒரு சின்ன பையனின் குரலில் கேட்டபோது ஒரு வித பூரிப்பும் மகிழ்ச்சியும் கூடி வந்தது. அந்த சந்தோஷம் மிக விரைவிலேயே அழிந்தது.
அந்த குரலை கேட்டு நான் திரும்பியபோது ஒரு 12-13 வயது தமிழ்ப்பையன் கையில் ஒரு சின்ன மூட்டையுடன் என்னைப்பார்த்து நின்றிருந்தான். அரைக்கால் சிலுவாருடன் ஆங்காங்கே கிழிந்த இடத்தில் ஒட்டுப்பட்ட சட்டை அணிந்திருந்தான். பழைய உடை என்றாலும் அது சுத்தமாக இருப்பதை பார்த்ததுமே அவன் மேல் ஒரு மரியாதை வந்தது. போட்டிருப்பது புதியதா பழையதா என்பதை பார்ப்பதைவிட அதை எப்படி பாதுக்காக்கிறார்கள் என்பதுதானே சிறந்த் விஷயம்?
"என்ன தம்பி?" நான் வாயை திறந்தேன். வார்த்தையிலேயே பரிவும் சேர்ந்து தம்பி என்ற பாசமும் ஒட்டிக்கொண்டது.
"அக்கா, நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்க்கா. வீட்டுல ரொம்ப கஷ்டம். நான் படிக்கணும். அதுக்கு பணமில்லை" என்றூ சொல்லிக்கொண்டே தன் மூட்டையில் கை விட்டான்..
இவன் பிச்சை எடுக்கும் எண்ணம் கொண்டவன் இல்லை என்பது தெளிவாக புரிந்தது எனக்கு. மனதில் தன்னம்பிக்கையும் நிறைய இருப்பதும் ஓரளவு அவன் முகத்தில் என்னால் கண்டறிய முடிந்தது. அந்த மூட்டையிலிருந்து ஒரு பொருளை எடுத்து காட்டினான்.
"அக்கா, இது நானே செதுக்கியது. Candle Stand. பாருங்க. பிடிச்சிருந்தா வாங்குங்க. RM10தான். என் படிப்புக்கு உதவியா இருக்கும்" என என் கிட்டே நீட்டினான்.
அதை நான் வாங்கிப்பார்த்தேன். சொந்தமாக செய்த வேலைப்பாடு தெரிந்தது. அந்த பையன் உண்மையிலேயே டேலண்டட். ரொம்ப அழகாய் செதுக்கப்படிருந்தது. ஆனால், அது எனக்கு பயன்படாது என்று தோன்றியது.
"தம்பி, எனக்கிது தேவைப்படாதுப்பா. பரவாயில்லை.. இந்த 10 வெள்ளியை வச்சுக்கோ. அக்காவுடைய கிஃப்ட்டா இருக்கட்டும்."
"வேணாம்க்கா." என்று கொஞ்சம் தயங்கினான்.
நான் வற்ப்புறுத்தி அவனின் சட்டை பாக்கேட்டில் திணித்தேன்.
அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் குரல் கேட்டது. அவருக்கு ஒரு 30-35 வயது இருக்கும்ன்னு நினைக்கிறேன். அந்த கடையில புத்தகம் வாங்க வந்தவர் போல. நான் அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்ததும் அவர்,
"இந்த மாதிரி பையனுங்களையெல்லாம் நம்பாதீங்கம்மா.. எங்கே இருந்து திருடிட்டு வந்தானோ தெரியலை. 10 வெள்ளின்னு சொல்றான்.. நீங்க வேற சும்மாவே காசு கொடுக்குறீங்க. அப்புறம் தம், தண்ணீன்னு குடிச்சு கூத்தடிக்காமல் என்ன பண்ணுவாங்க??"
அவரின் அந்த வார்த்தை எனக்கு கொஞ்சம் ஆத்திரம் கொடுத்தது. சிறுவனின் முகம் சுறுங்கியிருந்தது. அந்த பையனின் சந்தோஷத்தை திரும்ப கொண்டு வருவதுக்கும், இவன் அப்படிப்பட்ட சிறுவன் இல்லை என்று அந்த பெரியவரிடம் உணர்த்துவதுக்கும் திரும்ப அவனிடம் பேச்சு கொடுத்தேன்.
"தம்பி உன் பேர் என்னப்பா? என்ன படிக்கிறே?"
"அக்கா, என் பேரு குமரன். ஆறாம் வகுப்பு படிக்கிறேன்."
"படிச்சு பெரிய ஆள் ஆனதும் என்னவா ஆகப்போற?"
"நான் இஞ்சினியராகணும்ங்கிறது அப்பாவோட ஆசை. அவரோட ஆசை நிறைவேற்றனும்ங்கிறது என்னுடைய லட்சியம்." அவனுடைய கண்ணில் சாதிக்கணும்ங்கிற வெறி தெரிந்தது.
"வீட்டுல எத்தனை பேரு? அம்ம அப்பா என்ன பண்றாங்க?"
"எனக்கு ஒரே ஒரு தங்கச்சி. இப்போதான் 7 வயசு. அப்பா இருக்கிற வரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டாரு. அவர் இறந்துட்டாரு. அம்மாதான் ஆங்க்கங்கே வேலை செய்து கொஞ்சம் காசு சேர்த்து என்னை படிக்க வச்சாங்க. இப்போ அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை. வேலைக்கு போய் 1 வாரம் ஆச்சு. அதான் இப்போ நானும் வேலைக்கு போறேன்க்கா" அந்த சிறூவன் சொல்லும்போதே கண்ணில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
அதற்க்கு மேல் என்னாலையும் பேச முடியவில்லை.
"அக்கா. இன்னைக்கு நிறைய பேர் இந்த ஏரியாவுக்கு வந்திருக்காங்க. எல்லாரும் தீபாவளி ஷாப்பிங் வந்திருக்காங்க. அவங்க கிட்டேயும் நான் என் பொருளை விற்கணும்க்கா. நான் கிளம்புரேண்க்கா. ரொம்ப நன்றி" என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய மூட்டையை கையில் ஏந்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
அவன் நடந்து போவதையும், அங்கு ஷாப்பிங் செய்துக்கொண்டிருக்கும் சிலரிடம் பேசுவதையும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். சிலர் அவனிடம் பரிவுடன் பேசுவதும் சிலர் அவனை விரட்டுவதுமாய் இருந்தாலும் மான்ம் தளராமல் அடுத்தவர்களை சந்தித்தான் குமரன்.
"அண்ணே, அவன் சாதிப்பான் ஒரு நாள்.." என்று என் பக்கத்தில் இருந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு புத்த்கங்கள் வாங்கிவிட்டு ரயில் நிலையத்தை நோக்கி நடந்தேன்.
வழியில் ஒரு அம்மா ஓரத்தில் உட்கார்ந்து இருந்தாங்க. கையில் குமரன் காட்டிய அந்த மெழுகுவர்த்தி சிலை வத்திருந்தார். உடம்பு சரியில்லாமல் இருப்பது அவர் முகம் காட்டிக்கொடுத்தது. நான் என் நடையை தொடர்ந்தேன். சிறிது தூரம் சென்ற பிறகு, திடீரென்று திரும்பி பார்த்தேன். குமரன் அந்த அம்மாவை எழுந்திரிக்க உதவி செய்து ரெண்டு பேரும் ஒன்றாய் நடந்து போனார்கள். அவர்தான் குமரன் சொல்லிய அவர் நோய்வாய்ப்பட்ட அம்மாவாக இருக்குமோ என்று தோணியது.
திரும்பி அந்த சாலை முழுவதும் பார்த்தேன். பெரியவர்களிலிருந்து சிறியவர்கள் வரை குதூகலமாக சந்தோஷத்துடன் ஷாப்பிங் செய்துக்கொண்டிருந்தார்கள். நாமெல்லாம் சந்தோஷமாய் புத்தாடையுடன், நல்ல உணவுடன் சொந்தபந்தங்களுடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடபோகிறோம். ஆனால், இப்படியும் சிலர் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றனரே! அவர்களுக்கு இந்த மாதிரி தீபாவளி, பொங்கல் என்ற விழாக்கள் எப்படி இருக்குமோ! atleast ஒரு வேளை உணவாவது வயிறு நிறைய மனசு நிறைய சாப்பிடும்படி அமையுமா?
நண்பர்களுக்கு என்னுடைய உள்ளம் கனிந்த
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....



